ராவணன் தன்னைக் கடத்திச் சென்ற போது சென்ற வழியை காட்டுவதற்காக சீதை ஆபரணங்கள் விழுந்த கோவில் ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ளது
திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இந்த லட்சுமி நாராயணர் கோவிலானது ஜடாயு தீர்த்த கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷமானதாகும்
இதுகுறித்து கோயில் நிர்வாகி மங்களம் கூறுகையில்,“அயோத்தி மன்னன் தசரதனின் மகன் ராமன். இவர் விசுவாமித்திரரின் யாகத்துக்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார்
அதோடு கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு சாப விமோசனமும் கொடுத்தார். பின்னர் மிதிலை நகர் சென்று அங்கு ஜனகர் மாளிகையில் இருந்த சிவ தனுசை உடைத்து சீதையை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்
ராமனுக்கு அயோத்தி மன்னராக முடிசூட்ட வேண்டும் என்று தசரதர் நினைத்தார். அந்த நேரத்தில் தசரதரின் 2-வது மனைவி கைகேயி தனது மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கூறினார்
இதையறிந்த ராமன் தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் வனவாசம் சென்றார். அப்படி வனத்தில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இலங்கை வேந்தன் ராவணன் வந்து சீதையை இலங்கைக்கு கடத்தி சென்றான்
அப்போது சீதை தன்னை ராவணன் கடத்தி செல்கின்ற வழிப்பாதையை ராமரும், லட்சுமணரும் அறிய வேண்டும் என்று வழிநெடுகிலும் தனது ஆபரணங்களை கழற்றி வீசிக்கொண்டே சென்றாள்
அது இந்தக் கோவில் இருக்கும் இடத்தில் விழுந்தது. அதேபோல் ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் கொடுத்த ஜடாயு தீர்த்தம் இக்கோவிலில் உள்ளது
இந்த கோவிலில் உள்ள 3 தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை வணங்கினால் பித்ரு தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை" எனத் தெரிவித்தார்