திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அருவிகளில் ஒன்றாக அகஸ்தியர் அருவி விளங்குகிறது
ஆன்மீக அருவி என்று அழைக்கப்படும் அகஸ்தியர் அருவியில் மட்டும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுத்து வருவது வழக்கம்
குறிப்பாகச் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்
தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தொடர் விடுமுறை காரணமாக அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்
அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் அவர்கள் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்
அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை பாபநாசம் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் சோதித்து, பின்னரே அனுமதி அளிக்கின்றனர்
அங்குச் சுற்றுலாப் பயணிகளிடம் இருக்கும் பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மேலும், மது பாட்டில்கள் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன
மேலும், அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்காத வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர்
இந்த கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து தப்பி, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அருவியில் நீங்கள் பொழுதைப் போக்க விரும்பினால் உங்கள் பயணப்பட்டியலில் அகஸ்தியர் அருவி நிச்சயம் இடம்பிடிக்கும்